முத்தங்கள் கரைந்தன
எதிர்துருவ இருள்
தலையேதுமின்றி
உடலே கூவலாய்
அழைத்தது
0
உன்னுள்
புகை சுருண்ட மயக்கு
என் நாவுகள்
கசப்புச் சுட்டுத் திரும்பின
முன்பு
என் தனியெல்லைக் கற்கள் இருந்த
குழிகளில்
அவற்றின் விசுவாசங்கள்
அசைந்து
கிசுகிசுப்பதைத்
திடீரெனக் காண்கிறேன்
இந்த என் புழுக்கம்
கனத்துக் கனத்து
எந்த வினாடியின் அலகுநுனிக்குக்
காத்திருக்கிறதோ
வெடிக்கும் சிதறலில்
உன் ஸ்பரிசக் குளறல்கள்
இருந்தால்
கண்டுகொள் -- மீட்டுக்கொள்
இவை
தம் இருப்பின்
அவஸ்தை தாங்காமலே
மோகம் கருகிய பாலையில்
கண்ணீர்தேடி
அலைகின்றவை
நம்மைச் சுற்றிப் போர்த்திய
காற்றின்
கந்தல்
இதோ காலடியில்
கறையானை எதிர்நோக்கி
வெள்ளம்தான் (நாம் யாவரும்)
ஒவ்வொரு துளியிடையிலும்
கண்படாததொரு சவ்வு
0
எனினும் இதோ --
பசி
பசி
சட்டையுரித்துப்
பளபளத்துத் திரியுமதன்
நிழல்
நம் இருளுக்குள்
சரசரக்கிறது
வாவா .. .. ..
வளர்ந்து வளர்ந்து
அடிவான விளிம்பில் போய்
வழியும் உன் கூந்தலை
அள்ளிக் கொண்டு
வாவா .. .. ..
Saturday, December 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment